அவர் எப்பொழுது என்னருகில் வந்தார் என்று கவனிக்கவில்லை. நான் அவரை எதேச்சையாக கழுத்தை திருப்பி பார்க்கும் பொழுது அதற்காகவே காத்திருந்தவர் போல ‘ஒரு டோக்கன் வேணும்’ என்று சொன்னார். அதை.கிரகிக்கவே எனக்கு சில வினாடிகள் ஆனது. அது கொஞ்சம் பிரபலமான மதுரையில் இருந்த ஒரு டீக்கடை.
நான் ஏற்கனவே ஒரு டீயை குடித்துக் கொண்டிருந்தேன். வழக்கமாக ‘டீ வேண்டும்’ என்றோ அல்லது ‘பணம் வேண்டும்’ என்றோ எப்போதேனும் ஒருவர் கேட்பார். ஆனால் இவர் கேட்பது ‘ஒரு டோக்கன் வேணும்’ என்று. அருகிலிருக்கும் மிக தெரிந்தவரிடம் கேட்பது போல் கேட்கிறார். ‘டீ வேண்டும்’ என்று சொல்வதே உணவு வேண்டும் என்று யாசிப்பதை போல என்று நினைத்திருக்கலாம். பணம் வேண்டும் என்று சொல்வதும் இழுக்கு என்று நினைத்திருக்கலாம். நான் எதுவும் பேசவில்லை. எனது டீயை குடித்து முடிக்கும் முன்னே கல்லாவிலிருந்த ஆளிடம் காசு கொடுத்து ஒரு டீ டோக்கன் வாங்கி அவரிடம் தந்தேன். டீ எடுத்துக் கொண்டு வந்த அவரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன். அவர் வேறு ஏதோ ஒரு ஊரில் செக்யூரிட்டியாக வேலை செய்வது தெரிய வந்தது. கண்டிப்பாகக் பிச்சைக்காரர் இல்லை. ஆனால் தற்சமயம் பணமில்லை. இது அவரது ஊரும் இல்லை. இருந்தாலும் நேரடியாக பணம் கேட்க தயக்கமாக இருந்திருக்கலாம். ஒரு டோக்கன் வேண்டும் என்ற குரல் எந்தவித கெஞ்சலோ தயக்கமுமின்றி உரிமையுடன் ஒலித்தது. நாஞ்சில் நாடனின் ஒரு கதையில் மகாராஷ்டிராவில் ஓடும் ஒரு முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் பெட்டியில் தனது கடைசி சப்பாத்தியை சாப்பிட முயலும் கதை நாயகனின் கையை அருகில் இருக்கும் ஒரு முதியவர் தடுத்து "யாம் உண்பேம்” (hami khana) என்று.சொல்லுவார். நான் உண்ண வேண்டும் என்று அல்ல. நீ உண்ணலாம் என்றல்ல. நாம் உண்ணலாம்.
சில மனிதர்கள் பொருள் ரீதியாக
விளிம்பு நிலையை அடைந்தாலும் அவர்களது உள்ளம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள்
நேரடியாக யாசிப்பதை எப்பொழுதுமே விரும்புவதில்லை. இது ஒரு வகையில்
ஒரு விசை போல செயல்பட்டு
அவர்களை மேலும் கீழான விளிம்பு நிலைக்குத்
தள்ளாமல் மேல் நோக்கி செலுத்துகிறது.

Comments