“முருகேசா... இந்த ஊராவது எனக்கு செட்டாகுமா?” – இருபத்தியேழாவது முறையாக இந்தக் கேள்வியை முருகேசனிடம் கேட்டேன். அவனும் ஒவ்வொரு முறையும் சளைக்காமல் பதில் சொன்னான். ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு முறையில். “சார்.. இந்த ஊர் எல்லைல ஒரு கம்மா அது பக்கத்துல ஒரு சின்ன சுடல கோவில் இருக்கு.. சாயங்காலம் போயி உட்கார ரம்மியமா இருக்கும். உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றான். முருகேசன் எனக்கு டிரைவராக வந்து வருடம் பத்து ஆகிறது. அவனுக்கு குடும்பம் என்று ஒன்று இல்லை. நானும் ஏறக்குறைய அவனை போலத்தான், பல வருடமாய் என் வீட்டில் சமையல், பெருக்குவது, அயன் பண்ணுவது, கடைக்கு போவது, சிறு தோட்ட வேலை சகலமும் அவனே.
இதோடு எத்தனை ஊர் மாறியிருப்பேன் என்று
கணக்கேயில்லை. ஊர் மாறியபின் சில மாதம் நன்றாய் போகும். பின் எல்லாமே போலியாய்
இருப்பதாய் ஒரு தோற்றம். உடன் ஊர் மாற்றும் படலம். ஒரு ஊர் மாறியபின் இந்த
முருகேசன் சுடல கோவில் போல சில ரம்மியமான இடங்களை கண்டுபிடித்து வைத்திருப்பான்.
டீ ப்ளாஸ்க் உடன் போய் உட்கார்ந்தால் நேரம் போவதே தெரியாது. போரடித்தால்
முருகேசனிடம் எதாவது கேள்வி கேட்டு நேரம் போக்கலாம்.
சற்று ஊருக்கு ஒதுக்குபுறமாக அதே சமயம் சில
வீடுகள் சுற்றி இருக்கும்படி தனி வீடு அமர்த்தியிருந்தேன். முன்னால் ஒரு பெரிய
தாழ்வாரம். அதில் முருகேசன் தங்கி கொள்வான். ஒரு பட்டாளை. பின் ஒரு ஹால். பெட்ரூம்
என்று நாமே சொல்லி கொள்ளலாம். கொல்லைப்புறமும் ஒரு குறுந்தோட்டமும், அகலமான
மூடப்பட்ட கிணறும் இருந்தது.
மூன்று மாதம் போனதே தெரியவில்லை. சுடல கோவில்,
ஊரு சாவடி, நாற்புற சாலையில் அமைந்திருக்கும் டீக்கடை, இலுப்பை மரம்
சூழ்ந்திருக்கும் தம்புராட்டி கோவில், சிறு குன்று என்று அனைத்து இடங்களிலும் ஆசை
தீர அமர்ந்து பொழுது போக்கியாகிவிட்டது. பல முகங்கள் இப்போது பழகிய முகங்களாய்
தெரிய தொடங்கியிருந்தது. பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் சீனி கடன் கேட்டு வரும்
அளவுக்கு இன்னும் பழகவில்லையே தவிர, பின்னால் வளர்ந்திருந்த முருங்கையில் காய்
வேண்டுமளவுக்கு பழக்கம் இருந்தது.
மறுபடி அதே வெறுமை இருள் மனதுள் சூழ
தொடங்கிற்று. ஏன் சூழ்கிறது என்று புலப்படவில்லை. முருகேசனிடம் எதாவது பேசலாம். மன
இறுக்கம் குறையும். மெதுவாக தாழ்வாரம் வந்தேன். முருகேசன் அயர்ந்து தூங்கி
கொண்டிருந்தான். ஏதோ உள்ளுணர்வு உந்த சடாலென்று எழுந்த கொண்டவன், என்னை அங்கு
ஆச்சரியமாக பார்த்தான். வெளியே தூக்கம் வராத பக்கத்துக்கு வீட்டு பெரியவர்
தாழ்வாரத்தை மெதுவாக எட்டி பார்த்து, பின் எதோ முனகிவிட்டு சென்றார். முருகேசன், “என்ன
சார் தூங்கலியா?” என்றான் கொட்டாவி விட்டவாறே. மெதுவாக தரையில் அமர்ந்தவாறே
கேட்டேன், “வேற ஊர் போலாமா முருகேசா?”
பின் குறிப்பு: கதைப்படி பெரியவர் முனகியது
நாயகனுக்கு கேட்கவில்லை. கதையானது நாயகனின் பார்வையில் விரிவதால் உங்களுக்கும் தெரிய
வாய்ப்பில்லை. ஆனால் கதைசொல்லி விதிமுறையை மீறி உங்களுக்கு அதை சொல்ல ஆசை
படுகிறான். வெளியே தூக்கம் வராத பக்கத்து வீட்டு பெரியவர் தாழ்வாரத்தை மெதுவாக
எட்டி பார்த்து, “அடிக்கடி தனக்குத் தானே பேசுறாரு... என்ன பிரச்சினையோ” என்று
முனகியபடி சென்றார்.
Comments